| | | | | | | | | | | | | | | | | | |
கிரைம் Crime

தீராத காதல் - தடுமாறிய வாழ்க்கை - தற்கொலைகள் -தவிக்கும் குழந்தை !

by satheesh on | 2026-01-23 04:42 PM

Share:


தீராத காதல்  - தடுமாறிய வாழ்க்கை - தற்கொலைகள் -தவிக்கும் குழந்தை !

இராமநாதபுரம் மாவட்டம் ; உச்சிப்புளி அருகே உள்ள நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா அதே பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி ஆவார்.  பாண்டி இராமேஸ்வரத்தில் சொந்தமாகத் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். பாண்டியின் பெற்றோர் முறைப்படி சசிகலாவின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டுள்ளனர். ஆனால் சசிகலாவின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

தனது பெற்றோர் சசிகலாவின் சம்மதம் இல்லாமலேயே, அவரது உறவினரான முருகன் என்பவருக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தத் திருமணத்திற்குப் பிறகு,சசிகலாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். 

இந்தத் தம்பதியினருக்கு தற்போது 4 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால், திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்தும், சசிகலாவால் தனது காதலன் பாண்டியை மறக்க முடியவில்லை. கணவருடன் வாழ்ந்து வந்தாலும், சசிகலா மறைமுகமாகப் பாண்டியுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். தனது மனதிற்குப் பிடித்தமான வாழ்க்கையை வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் அவரிடம் நீடித்துக்கொண்டே இருந்தது.  கடந்த மாதம் சசிகலாவின் கணவர் முருகன் பணி நிமித்தமாகச் சென்னைக்குச் சென்றார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சசிகலா, தனது காதலன் பாண்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சசிகலாவின் பெற்றோரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகள் காணாமல் போனது குறித்து சசிகலாவின் பெற்றோர் இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த சசிகலாவையும் பாண்டியையும் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு இரு வீட்டினரையும் வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சசிகலாவுக்கு ஒரு குழந்தை இருப்பதையும், அவரது எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு போலீசார் அவருக்குப் பல அறிவுரைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. போலீசாரின் அறிவுரைக்குப் பிறகு, சசிகலா தனது தந்தை கண்ணனுடன் செல்ல சம்மதித்தார். தந்தை தனது மகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனால், பாண்டியைப் பிரிய நேரிட்டதும், காவல் நிலையம் வரை சென்ற அவமானமும் சசிகலாவை மனதளவில் வெகுவாகப் பாதித்தது. யாரிடமும் சரியாகப் பேசாமல் இருந்த சசிகலா, நேற்று முன்தினம் இரவு யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது வீட்டில் த*ற்கொ*லை செய்து கொண்டார். இந்த செய்தி சசிகலாவின் காதலன் பாண்டிக்கு எட்டியதும் மிகுந்த மனவேதனை அடைந்தார். பாண்டி தனது டிராவல்ஸ் தொழில் நிமித்தமாகச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்குச் சென்றிருந்தார். பயணிகளை இறக்கிவிட்டுவிட்டுத் தனது காரில் மீண்டும் ராமேஸ்வரம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். தர்மபுரி மாவட்டம் பாளையம் சுங்கச்சாவடி அருகே அவர் வந்து கொண்டிருந்தார். தான் உயிருக்கு உயிராக நேசித்த பெண் இனி இல்லை என்ற செய்தியைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அவருக்கு இல்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் சுங்கச்சாவடி அருகே காரை ஓரமாக நிறுத்தினார். அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஒரு காதல் ஜோடி, இடையில் ஐந்து ஆண்டுகள் பிரிந்திருந்தும், ஒருவரையொருவர் மறக்க முடியாமல் அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதல் என்பது அழகானது, ஆனால் அது உயிரைப் பறிக்கும் விபரீதமாக மாறியிருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சசிகலாவிற்கு இருக்கும் 4 வயதுப் பெண் குழந்தையின் நிலைதான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. தனது தாயின் இழப்பும், அதன் பின்னணியும் புரியாத அந்தச் சிறுமி திகைத்து நிற்பது காண்போரை நெகிழச் செய்கிறது. இந்தப் பிரச்சனையைச் சமூக ரீதியாக அணுகியிருக்கலாம் எனப் பலரும் கூறி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெற்றோர் காட்டும் கண்டிப்பும், பிள்ளைகள் எடுக்கும் பிடிவாதமான முடிவுகளும் எப்படி ஒரு பெரும் துயரத்தில் முடிகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. 

இணை ஆசிரியர் ; N.சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment