by Muthukamatchi on | 2025-04-05 01:20 PM
தேனி மாவட்டம்ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், அங்கன்வாடி உதவியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 156 அங்கன்வாடி பணியாளர், 1 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 29 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. மாவட்டத்தில் வட்டாரம்/திட்டம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனச்சுழற்சி விபரம் மாவட்ட திட்ட அலுவலகங்களிலும், அந்தந்நத வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், அங்கன்வாடி பணியாளர் ரூ.7700/-என்ற தொகுப்பூதியத்திலும், குறு அங்கன்வாடி பணியாளர் ரூ.5700/- என்ற தொகுப்பூதியத்திலும், அங்கன்வாடி உதவியாளர் ரூ.4100/- என்ற தொகுப்பூதியத்திலும் பணி நியமனம் செய்யபட்டு தொடர்ந்து 12 மாத காலம் பணியினை முடித்தப்பின், அவர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவர். மேற்கண்ட பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளருக்கான தகுதிகள் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின்படி கணக்கிடப்பட வேண்டும். 25 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மேலும் ஆதரவற்ற பெண்கள் எஸ்.சி/எஸ்.டி வகுப்பினர் 25 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 25 வயது முதல் 38 வயது வரை இருத்தல் வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான தகுதிகள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது நிர்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின்படி கணக்கிடப்பட வேண்டும். 20 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மேலும் ஆதரவற்ற பெண்கள் எஸ்.சி/எஸ்.டி வகுப்பினர் 20 வயது முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் 20 வயது முதல் 43 வயது வரை இருத்தல் வேண்டும்.
காலிப்பணியிடம் நிரப்ப விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தை மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவும், அதே கிராம ஊராட்சி எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பதார் அறிவிக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு (அ) அருகிலுள்ள வார்டு (அ) மையம் அமைந்துள்ள வார்டின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வார்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கீழ்கண்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் 07.04.2025 முதல் 23.04.2025 முடிய (அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை வழங்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வட்டாரத்தின் பெயர் | விண்ணப்பங்கள் வழங்க வேண்டிய குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக முகவரி |
ஆண்டிபட்டி | ஸ்ரீனிவாச நகர், ஆண்டிபட்டி |
போடிநாயக்கனூர் | விநோபாஜி காலனி, போடிநாயக்கனுார் |
சின்னமனூர் | கருங்காட்டான்குளம், சின்னமனுார் |
கம்பம் | அண்ணாபுரம், கம்பம் |
க.மயிலாடும்பாறை | மயிலாடும்பாறை ஊராட்சி அலுவலகம் பின்புறம், க.மயிலாடும்பாறை |
பெரியகுளம் | வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் பின்புறம், பெரியகுளம் |
தேனி (ஊரகம்) தேனி (நகரம்) | அன்னஞ்சிவிளக்கு, தேனி ஊரகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
முதல் மாடியில், தேனி. குறிப்பு : போடி நகராட்சி (ம) தேனி நகராட்சிக்குட்பட்ட விண்ணப்பங்கள் |
உத்தமபாளையம் | வட்டார அலுவலகம், பைபாஸ் அருகில் உத்தமபாளையம். |
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் /திட்டம் (Block/Project) குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self attested) நகல்கள் இணைக்கப்படவேண்டும். விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண் (தாய்/தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு (Self attested) இணைக்கப்படவேண்டும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.