| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

நிருபர், ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல்..! முன்னாள் ஜெயக்குமார் கடும் கண்டனம்..!

by Vignesh Perumal on | 2026-01-30 04:36 PM

Share:


நிருபர், ஒளிப்பதிவாளர் மீது கொலைவெறித் தாக்குதல்..! முன்னாள் ஜெயக்குமார் கடும் கண்டனம்..!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் முறைகேடாக இயங்கி வரும் குவாரி குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகப் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமான குவாரி ஒன்று விதிமுறைகளை மீறிச் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து உண்மைத் தன்மையை அறியவும், செய்தி சேகரிக்கவும், நிருபர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகிய இருவரும் அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள முறைகேடுகளைப் படம்பிடிக்க முயன்றபோது, அங்கிருந்த மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துத் தடுத்துள்ளது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த கும்பல், திடீரென உருட்டுக் கட்டைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் நிருபர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கியது.

இந்தத் தாக்குதலில் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். நிருபர் கதிரவனுக்கும், செபாஸ்டினுக்கும் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சக ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "அரசு முதல் அதிகாரிகள் வரை அனைவரும் லஞ்சமாகப் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்வதால், தமிழகத்தில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது," எனச் சாடினார்.

உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லும் ஊடகத்தினர் மீதான இத்தகைய தாக்குதல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உரியப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்," என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்துக் கரூரில் இன்று மாலை பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை இதுவரை யாரையும் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்ததாகத் தகவல் இல்லை.










நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment