by Vignesh Perumal on | 2026-02-05 03:29 PM
திண்டுக்கல் மாநகராட்சியின் முக்கிய குடியிருப்புப் பகுதியான ஆர்.எம். காலனி பகுதியில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றியுள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எம். காலனி பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியின் நுழைவு வாயில் மற்றும் சாலையோரங்களில் நீண்ட நாட்களாகப் பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் உணவகங்கள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்தன.
இந்த ஆக்கிரமிப்புகளால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் நடந்து செல்ல இடமின்றி சிரமப்படுவதாகவும் மாநகராட்சிக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன.
இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், பொது இடங்களை ஆக்கிரமித்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) மற்றும் நகரமைப்பு அலுவலர்கள் முன்னிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.
ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏதேனும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் அங்குப் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் கூரைகள், இரும்புத் தகடுகள் மற்றும் நடைபாதை கடைகளை இடித்து அகற்றினர்.
சுமார் 10-க்கும் மேற்பட்ட நிரந்தரமற்ற கடைகள் அகற்றப்பட்டன. மீண்டும் இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படுவதோடு, பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக நிலவி வந்த இந்தப் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதால், ஆர்.எம். காலனி பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர வேண்டும் எனப் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
சற்று பரபரப்பு...! பிரதமரை தாக்க சதி...! எதிர் எதிர் விளக்கம்...!
மக்களே உஷார்....! சென்னையில் H5N1 உறுதி...! ஆய்வாளர்கள் தகவல்...!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள்...! 11-ம் தேதி தமிழ்நாடு வருகை..! எதுக்கு தெரியுமா...!
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்...!