| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

தனியார் அணையை இடிக்கத் தடை...! கோர்ட் அதிரடி உத்தரவு...!

by Vignesh Perumal on | 2026-02-03 03:27 PM

Share:


தனியார் அணையை இடிக்கத் தடை...! கோர்ட் அதிரடி உத்தரவு...!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலைப்பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட அணையை (தடுப்பணை) இடிக்கத் தடை விதித்ததோடு, அதனைச் சேதப்படுத்தியிருந்தால் வனத்துறையினரே அதனைச் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில், ஒரு தனியார் நில உரிமையாளர் தனது பட்டா நிலத்தில் நீர் சேகரிப்புக்காக ஒரு தடுப்பணையை கட்டியிருந்தார்.

அந்த அணை வனப்பகுதியை ஒட்டி இருப்பதாலும், அது நீர் வழித்தடத்தை மறித்துக் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி வனத்துறையினர் அந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, வனத்துறை அதிகாரிகள் உரிய முன்னறிவிப்பின்றி அந்தப் பகுதிக்குச் சென்று, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அணையின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனை எதிர்த்து நில உரிமையாளர் தரப்பில், "தனது சொந்தப் பட்டா நிலத்தில், விவசாயத் தேவைக்காகக் கட்டப்பட்ட அணையை வனத்துறையினர் அத்துமீறிச் சேதப்படுத்தியுள்ளனர்" என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வனத்துறையினரின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'கன்னிவாடி மலைப்பகுதியில் உள்ள அந்தத் தனியார் அணையை மேலும் இடிக்கவோ அல்லது சேதப்படுத்தவோ கூடாது என வனத்துறைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கனவே அந்த அணையை வனத்துறையினர் சட்டவிரோதமாகச் சேதப்படுத்தியிருப்பது உறுதியானால், அதை வனத்துறையினரே தங்களது சொந்தச் செலவில் மீண்டும் சீரமைத்துத் தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சம்பந்தப்பட்ட நிலம் பட்டா நிலமா அல்லது வனப்பகுதியா என்பதை வருவாய்த்துறை மற்றும் வனத்துறை இணைந்து நில அளவை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

பொதுவாக வனப்பகுதிகளில் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொண்டால் வனத்துறை நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால், இந்தப் பட்டா நில விவகாரத்தில், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வனத்துறை செயல்பட்டதாக நீதிமன்றம் கருதியுள்ளது. குறிப்பாக, "அரசு அதிகாரிகளே ஒரு கட்டுமானத்தைச் சேதப்படுத்திவிட்டு, மீண்டும் அவர்களே அதைச் சீரமைக்க வேண்டும்" என நீதிமன்றம் உத்தரவிட்டது வனத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment