by Vignesh Perumal on | 2026-03-29 12:31 PM
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், மைலாப்பூர் பகுதியில் சுமார் 55 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் தங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பலமுறை மனு அளித்துள்ளனர். பலமுறை போராட்டங்கள் நடத்தியும், தேர்தல் காலங்களில் அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளித்தும், தேர்தல் முடிந்த பின் தங்களது கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு.
பட்டா இல்லாத காரணத்தால் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதிலும், வீடுகளை முறையாகப் பராமரிப்பதிலும் சிக்கல்கள் நீடிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய மைலாப்பூர் கிராமத்தினர் ஒன்றிணைந்துள்ளனர்.
"பட்டா வழங்காத அரசை மற்றும் அரசியல் கட்சிகளைக் கண்டிக்கிறோம்" என்ற வாசகங்களுடன் தங்கள் வீடுகளின் கூரைகளிலும், வாசல்களிலும் கருப்புக்கொடிகளைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் யாரும் தங்கள் பகுதிக்குள் வந்து வாக்கு சேகரிக்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளதோடு, இது தொடர்பாகப் பதாகைகளையும் வைத்துள்ளனர்.
"பட்டா இல்லை என்றால் ஓட்டு இல்லை" என்ற ஒற்றை இலக்குடன் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிக்கப் போவதாகத் தீர்மானித்துள்ளனர்.
இந்தத் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரியவந்ததையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மக்களின் இந்தப் போராட்டம் ஆத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் தொகுதி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் போட்டியிடும் முக்கியத் தொகுதி என்பதால், இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி - ஒருவர் கைது ! பெண் உட்பட 6 பேரைத் தேடும் போலீஸ் !!
பத்மநாபபுரம் அரண்மனை - பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை. !
போதை மாத்திரை விற்பனை - 3 பேர் கைது ! பொறி வைத்து பிடித்த போலீஸ் !!
விபரங்கள் இல்லாத ரசீது - வழக்கு ! ஆணையாளருக்கு பிடிவாரென்டு.!!
மசாஜ் சென்டரில் ஹைடெக் விபச்சாரம் - தட்டி தூக்கி போலீஸ் அதிரடி!