by Vignesh Perumal on | 2026-03-18 02:54 PM
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விவசாய மின் இணைப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த புரோக்கர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர்.
நிலக்கோட்டையை அடுத்த பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார். விவசாயியான இவர், தனது விவசாய மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இதற்குத் தேவையான 'தடையில்லா சான்று' (NOC) பெறுவதற்காகப் பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகியுள்ளார்.
பள்ளப்பட்டி கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றி வரும் வத்தலகுண்டுவைச் சேர்ந்த சத்யா (56), இந்தச் சான்றிதழை வழங்கக் குமாரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். அவருக்கு உதவியாகப் பள்ளபட்டியைச் சேர்ந்த சாந்தகுமார் (44)என்பவர் புரோக்கராகச் செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து தடையில்லா சான்று வழங்கக் குமாரிடம் ரூ.4,000 லஞ்சமாகக் கேட்டுள்ளனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இது குறித்துத் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் குமாரிடம் கொடுத்து அனுப்பினர். இன்று திட்டமிட்டபடி, குமார் அந்த ரூ.4,000 பணத்தைப் பெண் VAO சத்யா மற்றும் புரோக்கர் சாந்தகுமார் ஆகியோரிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில், ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட போலீசார், லஞ்சப் பணத்தை வாங்கிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சத்யா மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவரிடமும் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சத்யாவின் வத்தலகுண்டு இல்லத்திலும் சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி பிடிபட்ட சம்பவம் வருவாய்த் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
எரிந்து காரில் சடலங்கள் அதிர்ச்சி ! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சோகம் !!
பெண் VAO கையும் களவுமாகப் பிடிபட்டு கைது...!
ஒரு வாரத்திற்கு மழை...! இன்று ஒரு மணிநேரம்....! குளுமையான சூழல் நிலவும்...! வானிலை ஆய்வு மையம்..!
4 பேர் கைது...! 700 மது பாட்டில்கள் பறிமுதல்..! திடுக்கிடும் தகவல்...!
நள்ளிரவில் அதிரடி நடவடிக்கை...! காரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்...!