| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைன்மென்ட் - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல் !!

by satheesh on | 2026-03-15 03:29 PM

Share:


ஸ்டாலின் ஓபிஎஸ் க்கு கொடுத்த அசைன்மென்ட்  - நிறைவேற்றுவாரா ? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல்  !!

ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட் ; வெற்றி பெறுவாரா? ஓபிஎஸ் ! களம் மாறும் அரசியல்  !!!


பெரும்பாலும் அதிமுக ஆதரவு மனநிலையில் இருக்கும் தென்மாவட்ட முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்வதற்காக மட்டுமே ஓபிஎஸ்சின் இணைப்பிற்கு ஓகே சொல்லியிருக்கிறது திமுக தலைமை.. ஆனால் ஓபிஎஸ்சால் அந்த வேலையை கனகச்சிதமாக செய்து முடிக்க முடியுமா என தொக்கி நிற்கும் கேள்விக்குறியை நம்மால் புறந்தள்ள முடியாது. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள் முக்குலத்தோர் சமுதாய மக்கள். அதை அப்படியே தக்கவைத்துக்கொண்டார் ஜெயலலிதா. அதனால் தான் ஜெயலலிதா காலத்தில் முதலில் சசிகலா, பின்னர் டிடிவி தினகரன் என முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களால் அதிமுகவில் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஒரு நேரத்தில் சசிகலா மற்றும் தினகரன் மீது ஜெயலலிதாவிற்கு கசப்பு ஏற்பட்ட போது, தனக்கான இடத்தை முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஓபிஎஸ்சிடம் தான் ஒப்படைத்தார் ஜெயலலிதா. என்னதான் ஓபிஎஸ்சும் தனது சமுதாயத்தை சேர்ந்தவர் தான் என்றாலும், தங்களுக்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவி ஓபிஎஸ்சுக்கு வழங்கப்பட்டதால் அவர் மீது சசிகலாவிற்கும் டிடிவிக்கும் காழ்ப்புணர்ச்சி இருந்தது தவிர்க்க முடியாதது. ஆனால் அரசியல் மாற்றத்தில் எடப்பாடியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஓபிஎஸ்ஐ ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் டிடிவி. ஆனால், இப்போது கூட்டணி தர்மத்தால் எடப்பாடியுடன் சேர்ந்து ஓபிஎஸ்ஐ எதிர்க்கும் நிலைமைக்கு வந்திருக்கிறார் டிடிவி. இந்த இக்கட்டான சூழலில் தென்மாவட்டங்களில் இருக்கும் முக்குலத்தோர் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அள்ளிக்கொண்டு வரும் முக்கிய பொறுப்பை ஓபிஎஸ் கையில் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதை செவ்வனே செய்து முடிப்பாரா ஓபிஎஸ் என்பது தான் இப்போதைய கேள்வியே. தங்களுக்கான முக்கியத்துவத்தை சிதைத்து விட்டார் என்பது தான் எடப்பாடி மீதான முக்குலத்தோரின் குற்றச்சாட்டு. அதற்காகத் தான் டிடிவியை ஆதரிக்கும் மனநிலைக்கு தயாரானார்கள் தென்மாவட்ட முக்குலத்தோர். ஆனால், இப்போது எடப்பாடிக்காக வாக்கு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் டிடிவி. எனவே அவரின் பிரசாரம் முக்குலத்தோரிடையே எடுபடுமா என்பதும் சந்தேகம் தான். இந்த குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஓபிஎஸ்சை களமிறக்கியுள்ளது திமுக. அதனால் தான், திமுகவே அதிகாரப்பூர்வமாக இன்னும் பிரசாரத்தை தொடங்காத நிலையில், முதல் ஆளாக தென்மாவட்டங்களில் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார் ஓபிஎஸ். தென்காசி மாவட்டத்தில் தொடங்கியுள்ள ஓபிஎஸ்சின் பிரசாரம், நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் என முக்குலத்தோரின் ஹாட்கோர் மாவட்டங்களுக்கு வரும்போது தான் அதற்கான உண்மையான ரியாக்சன் வெளிப்படும். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆதரவோடு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் ஓபிஎஸ். அந்த தேர்தலில் அவர் சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். அந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற ஐயுஎம்எல் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி 5 லட்சத்து ஒன்பதாயிரம் வாக்குகள் பெற்றிருந்தார்.  ஆனால், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் பெற்ற வாக்குகள் வெறும் 99 ஆயிரம் மட்டுமே. இதுவே ஓபிஎஸ்சுக்கு பெரிய வெற்றி தான். அதிமுகவிற்கும் ஓபிஎஸ்சுக்குமான இந்த வாக்கு வித்தியாசம் எடப்பாடி எதிர்ப்பு மனநிலை தான் என கணக்கு போடுகிறது திமுக. ஆனால், 2024-ல் இருந்த மனநிலை இப்போதும் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் டிடிவியின் இன்புளுயன்சை ஓபிஎஸ்சால் ஓவர்டேக் செய்ய முடியுமா? டிடிவி, ஓபிஎஸ் இருவருக்கும் சசிகலாவின் என்ட்ரி சவாலாக மாறுமா?... இத்தனை தடைகளையும் வெற்றிகரமாக தாண்டினால் தான் தான் முக்குலத்தோர் வாக்குகளை திமுக பக்கம் மடைமாற்றுவது என்பது ஓபிஎஸ்சுக்கு சாத்தியம்.  அந்த நம்பிக்கையில் தான், ஸ்டாலின் கொடுத்த அசைன்மெண்ட்டை தென்காசியில் தொடங்கியிருக்கிறார் ஓபிஎஸ். ஒன்று மட்டும் உறுதி... தென்மாவட்டங்களில் திமுக பெறப்போகும் வெற்றியை பொறுத்து தான் ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் அமையப்போகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ரத்தத்தின் ரத்தங்கள் உடன்பிறப்புகளோடு கைகோர்க்குமா ?  பொறுத்திருந்து பார்ப்போம்.! 


இணை ஆசிரியர்  : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி. 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment