by satheesh on | 2026-03-12 10:25 PM
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது இதுதான்!
அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தால்தான் திமுக அரசை வீழ்த்த முடியும் என்று நம்பிய பாஜக, இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக பாஜகவை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வந்த அண்ணாமலையை, எடப்பாடி பழனிசாமிக்காக, தலைவர் பதவியிலிருந்து மாற்றியது. இப்போது, திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகக் கருதப்படுவதால், அதிமுக பாஜக கூட்டணியால் திமுக கூட்டணியை வீழ்த்த முடியுமா என்ற சந்தேகத்தில் தவிக்கிறது பாஜக. என்னதான் திமுக அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்தி பெருமளவு இருந்தாலும், எதிர்ப்பு வாக்குகளை விஜய்யின் கட்சி கணிசமாகப் பிரித்து விட்டால், அது அதிமுக பாஜக கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக் கெடுத்து விடும் என்பது நியாயமான சந்தேகம்தான். விஜய் கட்சியுடனான கூட்டணியை எடப்பாடி முதலில் பெரிதும் விரும்பினார். தேர்தல் மிக நெருங்கி விட்ட நிலையில், விஜய் வந்தாலும் பாஜகவை உதறி விட்டு அவருடன் கூட்டு சேர்வது பெரும் குழப்பத்தில் முடியும் என்று அவர் நினைக்கலாம். அதிமுக-பாஜக-த.வெ.க மூன்றும் சேர்ந்த கூட்டணி அமைக்க முடிந்தாலும், தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிக்க முடியுமா என்பதும் பெரிய கேள்வி. அதிமுக உதவியுடன் சட்டசபையில் நுழைந்து விடக் காத்திருக்கும் தமிழக பாஜக பிரமுகர்களுக்கு, கூட்டணிக்குள் விஜய் கட்சி வந்தால் தங்களுக்கு சீட் கிடைக்குமா என்ற அச்சமும் இருக்கலாம். அதனால், வேறு வழியில்லாத நிலையில், த.வெ.க. வை கூட்டணியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று அதிமுகவும் பாஜகவும் கூறுகின்றன. விஜய் கட்சியால் சரியான கூட்டணி அமைக்க முடியாவிட்டால், அக்கட்சிக்கு டெபாஸிட் வாங்கும் அளவுக்கு வாக்குகள் கிடைக்கலாமே தவிர, வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு. அதிமுக பாஜக வெற்றி வாய்ப்பைக் கெடுத்த திருப்தி மட்டுமே அதற்கு கிட்டும் பயனாக இருக்கும். இன்றைய நிலையில், விஜய்யை convince செய்து அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ப்பது நல்லதுதான். ஆனால், அது சவாலுக்குரிய காரியம். யதார்த்த நிலையை புரிந்து கொள்ளும் பக்குவம் விஜய்க்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அது நடக்குமா என்று தெரியவில்லை. அதிமுக கூட்டணிக்கு ஆசைப்படாமல், அண்ணாமலையின் போக்கில் விட்டிருந்தால், இன்றைய அரசியல் களம் திமுகவா பாஜகவா என்று மாறியிருக்கும். அதைக் கெடுத்ததுதான் கண்ட பலன். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது என்பது இதுதான் – துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.
திடீர் தண்ணீர் திறப்பு ! அச்சமடைந்த பொதுமக்கள் !! அதிகாரிகள் அலட்சியம் !!!
தர்பூசணி சாப்பிட்ட 4 பேர் பலியான பரிதாபம் ! தீவிர விசாரணைக்கு உத்தரவு!!
வாக்கு எண்ணிக்கை ! வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் !!
அதிகரிக்கும் ஐஸ்கிரீம் விற்பனை ! நிறுவனங்களில் ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு.!!
பழனியில்....! ஆண்டிபட்டி தொழிலாளி அடித்துக் கொலை...! 3 பேர் கைது...!