by Vignesh Perumal on | 2026-03-11 08:22 PM
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கத்தியைக் காட்டி மிரட்டி, 7 பவுன் தங்க நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குயவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி செவந்தியம்மாள் (50). இந்தத் தம்பதியினர் அப்பகுதியில் உள்ள தங்களது தோட்டத்து வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று முருகன் வெளியே சென்றிருந்த நிலையில், செவந்தியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்தனர்.
வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், செவந்தியம்மாளைக் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அவர் சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி, அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் தங்க நகைகளைத் பறித்துக்கொண்டனர். மேலும், வீட்டிலிருந்த ரூ.1.5 லட்சம் ரொக்கப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தத் துணிகரக் கொள்ளை குறித்துக் கன்னிவாடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன், சார்பு ஆய்வாளர் சிவநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட செவந்தியம்மாளிடம் கொள்ளையர்களின் அடையாளம் குறித்துப் போலீசார் கேட்டறிந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பி ஓடிய மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி அரங்கேறிய இந்த வழிப்பறி சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
மதுரையில் புதிய கூடுதல் நீதிமன்றம் கட்டிடம்...! உச்ச நீதிமன்ற நீதிபதி...! பங்கேற்பு...!
பெரும் சோகம்...! கார் மோதி மில் தொழிலாளி பலி...! போலீசார் விசாரணை...!
உளவுத்துறை ஐ.ஜி. இடமாற்றம்..! தேர்தல் ஆணையம் அதிரடி..!
10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை..! போலீசார் தீவிர விசாரணை...!
யாரும் ஓட்டு கேட்டு உள்ளே வராதீர்கள்...! தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்..! பரபரப்பு...!