by Vignesh Perumal on | 2026-03-05 01:00 PM
திருமண ஆசை காட்டி மாற்றுத்திறனாளி இளைஞரிடம் 2 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளைப் பறித்துக்கொண்டு மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த ஒருவரைப் பழனி தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பெண் உட்பட மற்றவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கோதைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (29). மாற்றுத்திறனாளியான இவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜோசப் (55), மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (45) மற்றும் சித்ரா (49) ஆகிய இடைத்தரகர்கள் பாலகிருஷ்ணனை அணுகியுள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த ராமலட்சுமி (28) என்ற பெண்ணை, அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று கூறி அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதனை நம்பிய பாலகிருஷ்ணன் தரப்பினர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் வைத்து ராமலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமண ஏற்பாட்டிற்காக இடைத்தரகர்களிடம் ரூ. 2 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், மணப்பெண் ராமலட்சுமிக்கு 2 பவுன் தங்க நகைகளும் போடப்பட்டுள்ளன.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, வீட்டில் இருந்த ராமலட்சுமி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன், இதுகுறித்து இடைத்தரகர்களான ஜோசப், கிருஷ்ணவேணி மற்றும் சித்ரா ஆகியோரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் முறையான பதில் அளிக்காமல், பாலகிருஷ்ணன் மீது 'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்' கீழ் புகார் அளிப்போம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலகிருஷ்ணன், பழனி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பாலகிருஷ்ணனின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், திட்டமிட்டே மாற்றுத்திறனாளியை ஏமாற்றிப் பணம் பறித்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியில் தொடர்புடைய ஜோசப்பை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள ராமலட்சுமி, கிருஷ்ணவேணி மற்றும் சித்ரா ஆகியோரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
திருநள்ளாறு போறீங்களா ? இத படிங்க முதல்ல.!
சங்கீதாவின் அட்டாக் - அப்செட் ஆன விஜய் ! சமாதான டீலிங்?
திமுக எம்.எல்.ஏ. சண்முகையாவின் சகோதரர் படுகாயம்..! கொடூர விபத்து...!
கல்யாண மோசடி...! ஏமாற்றி ரூ.2 லட்சம் சுருட்டிய கும்பல்..! ஒருவர் கைது..!
ஓபிஎஸ் இணைப்பு - திமுகவில் சலசலப்பு ! அதிர்ச்சியில் அறிவாலயம் !!