| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

கொடைக்கானலில் கொலை...! 4 விடுதி ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..!

by Vignesh Perumal on | 2026-02-25 12:49 PM

Share:


கொடைக்கானலில் கொலை...! 4 விடுதி ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், துணை நடிகையின் தந்தை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் துப்பு துலக்க 4 விடுதி ஊழியர்களைப் பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் வழியில், சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த சூரியநாராயணன் (72) என்பவருக்குச் சொந்தமான தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர் பிரபல திரைத்துறை துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை ஆவார். சூரியநாராயணன் கடந்த சில நாட்களாகக் கொடைக்கானலில் தங்கி தனது விடுதியைப் பராமரித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள், சூரியநாராயணனை மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும், விடுதியில் இருந்த நகை மற்றும் ரொக்கப் பணம் மாயமாகி இருந்தது. இது திட்டமிட்ட ஆதாயக் கொலை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கொலைச் சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் உத்தரவின் பேரில் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.

கொடைக்கானல் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) யுவபிரியா மேற்பார்வையில், காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையில் போலீசார் பல்வேறு கோணங்களில் ஆதாரங்களைத் திரட்டி வந்தனர்.

கொலை நடந்த விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகள் மற்றும் அங்குப் பணிபுரிந்தவர்களின் விவரங்களைச் சேகரித்த போலீசார், தற்போது முக்கிய நகர்வை மேற்கொண்டுள்ளனர். அந்த விடுதியில் வேலை பார்த்து வந்த 4 ஊழியர்களை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொலை நடந்த அன்று அவர்களின் நடமாட்டம் எப்படி இருந்தது? விடுதிக்கு வந்து சென்ற வெளிநபர்கள் யார்? என்பது குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கொலைக்குத் துணையாக இருந்தவர்கள் அல்லது கொலையாளிகளுக்குத் தகவல் கொடுத்தவர்கள் யாரேனும் இந்த ஊழியர்களுக்குள் இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

மறைந்த சூரியநாராயணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதி ஊழியர்களிடம் நடத்தப்படும் இந்த விசாரணையின் முடிவில், கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனத் தனிப்படை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.









நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment