by Vignesh Perumal on | 2026-02-25 12:27 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் ஆட்டோ ஓட்டுநர்களுடனான மோதலில், மர்ம நபர்கள் ஆட்டோ ஸ்டாண்ட் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
வத்தலகுண்டு காளியம்மன் கோவில் அருகே ஆட்டோ ஸ்டாண்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று இந்த ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சில இளைஞர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே கடும் கைகலப்பு உருவானது. அங்கிருந்தவர்கள் அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
மோதல் முடிந்து சில மணி நேரங்கள் கழித்து, மீண்டும் அதே பகுதிக்கு வந்த அந்த மர்ம நபர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அமர்ந்திருந்த ஆட்டோ ஸ்டாண்ட் மீது திடீரெனத் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டை வீசித் தாக்கினர். குண்டு வெடித்ததில் தீப்பற்றியதால் அங்கிருந்த ஓட்டுநர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அரங்கேறிய இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் கௌதம் மற்றும் சார்பு ஆய்வாளர் முனியாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
வெடிக்காத குண்டுகள் ஏதேனும் உள்ளதா மற்றும் சேத விவரங்கள் குறித்துப் போலீசார் ஆய்வு செய்தனர். மோதலில் ஈடுபட்ட நபர்கள் யார்? அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! புதிய ஆட்சியர்கள் நியமனம்..!
நேர்மையின் சகாப்தம் முடிந்தது..! மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்..!
கள்ளக்காதல் எதிரொலி - இருவரையும் குத்திக் கொன்ற கணவன் ! தவிப்பில் குழந்தைகள் !!
கொடைக்கானலில் கொலை...! 4 விடுதி ஊழியர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..!
வத்தலக்குண்டில் பயங்கரம்...! மோதல்..! பெட்ரோல் குண்டு வீச்சு..! திக் திக் நிமிடங்கள்..!