by Vignesh Perumal on | 2025-04-01 04:32 PM
ராம நவமி தினத்தையொட்டி வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சேலம் அருகே அயோத்தியப்பட்டினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "ராம ரத யாத்திரை சிறப்பு பூஜைகளுடன் சேலம் அயோத்தியாபட்டினம் தொடங்கி, உடையப்பட்டி அம்மாப்பேட்டை ரவுண்டானா வழியாக சவுந்தரராஜா பெருமாள் கோவிலில் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சின்னக்கடை, பெரியக் கடை வீதி வழியாக செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் நிறைவடைகிறது. இது தொடர்பாக அனுமதி கோரி தமிழக அரசு மற்றும் போலீசாருக்கு மனு அளித்தும், இதுவரை எந்த பதிலும் இல்லை" என்று கூறியுள்ளார்.
இச்சூழலில், இவ்வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன் சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வகையில் , காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபி, சேலம் அம்மாப்பேட்டை உதவி ஆணையர் கடந்த மார்ச் 31 ஆம் தேதி அனுமதி மறுத்து உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதி, காவல்துறை அனுமதி வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று கூறி வழக்கை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்