by satheesh on | 2026-06-29 02:55 PM
கிரண்டர் செயலி மூலம் பழகி வீட்டில் புகுந்து கத்தி முனையில் 6 சவரன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய 2 பேர் கைது :
சென்னை சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் கிராமம், சரஸ்வதி தெருவைச் சேர்ந்த ராகேஷ் (41), போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கோவிலஞ்சேரி அருகே உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி ராகேஷின் மனைவி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், காலை சுமார் 11.30 மணியளவில் கிரண்டர் (Grindr) செயலி மூலம் அறிமுகமான இருவரை வீட்டிற்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த இருவரும் கத்தியை காட்டி மிரட்டி, வீட்டிலிருந்த 6 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கமாக ரூ.60 ஆயிரத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவரை ஏடிஎம் மையத்திற்கு அழைத்துச் சென்று பணம் எடுக்க வைத்து அதையும் பறித்துச் சென்றுள்ளனர். இதனுடன், ராகேஷை நிர்வாணப்படுத்தி வீடியோ பதிவு செய்த அவர்கள், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர் உடனடியாக புகார் அளிக்காமல், இரவு சுமார் 9 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையின் 100 என்ற அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேலையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 296(b), 329(4), 308, 351(3) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வீடு மற்றும் அவர்கள் கண்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் (28) மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முகமது ரஷிக் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜூலை 10-ஆம் தேதி வரை புழல் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : N. சதீஷ்குமார், பெரியகுளம். தேனி.