by Vignesh Perumal on | 2025-03-24 06:24 AM
அருள்மிகு வடபழனி ஆண்டவர் கோவில்
சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. மேலும், இது தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் (கோலிவுட்) அமைந்துள்ளதாலும் தமிழ் திரைப்படத்துறையினர் வருகை அதிகமிருப்பதாலும் மக்களிடையே பிரபலமான கோவிலாக உள்ளது.
வரலாறு:
1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் இக் கோயில் கட்டப்பட்டது. இன்று மக்களின் ஆதரவால் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,000 தம்பதியர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
இக் கோவிலின் தலபுராணத்தில், முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் முதலில் இருந்த கொட்டகையை அவரின் சொந்த வழிபாட்டிற்காக அமைத்தார் எனவும், அங்கு தென்பழநி முருகனின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமயம் தீவீர வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அந்நோய் தீருவதற்கு அவர் தவறாமல் திருத்தணி மற்றும் திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். பின்னர், தென்பழநி யாத்திரையின் போது ஒரு சாது சொல்லியதற்கிணங்க, தான் தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகனின் உருவப்படத்தை வைத்து வழிபடலானார். தன் நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். இதற்கு "பாவாடம்" என்று பெயர். பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார். மேலும், அவர் நாளடைவில் அந்த இடத்தில் முருகனின் தெய்வீக சக்தியை உணர்ந்தார். அதனால் அவர் பிறரிடம் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறின. அதனால் மக்கள் அவர் சொல்வதை "அருள்வாக்கு" என்று எடுத்துக்கொண்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான நோய் தீருதல், வேலை வாய்ப்பு மற்றும் திருமணம் ஆக வேண்டி அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர் என்ற விபரம் கூறப்படுகிறது. அது முதல் அவர் அண்ணாசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார்.
அவருக்குப்பின், அவரின் பிரதான சீடரான இரத்தினசாமி செட்டியார் என்பவரால் 1865ம் ஆண்டு தென்பழநியில் உள்ளது போல சிலை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டது. ஒரு நாள் இரத்தினசாமி செட்டியாரின் கனவில் அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி தன்னைப்போலவே "பாவாடம்" தரித்துக் கொள்ளுமாறு பணித்தார். அதனால் இவரும் பாவாடம் தரித்து, குறி சொல்லும் ஆற்றலைப் பெற்று இரத்தினசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார். தற்போது உள்ள கர்ப்பக்கிருகம், உட்பிரகாரம் மற்றும் கருங்கல் மண்டபம் போன்றவை இரத்தினசாமித் தம்பிரானின் சீடரான பாக்கியலிங்கத் தம்பிரான் செங்குந்தர் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். இம் மூன்று தம்பிரான்களின் (சித்தர்கள்) சமாதியும் தமிழ்நாட்டில் உள்ள நெற்குன்றம் போகும் பாதையில் அமைந்துள்ளன. இங்கு சித்தர்கள் ஆலயம் அமைக்கப்பட்டு பௌர்ணமி பூசை மற்றும் குரு பூசை போன்றவை விமரிசையாக நடைபெறுகிறது.
செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மாற்றம் ! தேர்தல் ஆணையம் அதிரடி !!
தூத்துக்குடி சம்பவம் - வீடு வீடாக விசாரணை தீவிரம் ! திணறும் தனிப்படைகள் !!
மகளே அம்மாவை கொல்ல முயன்ற கொடூரம் ! காதலனுடன் மகள் கைது !! அதிர்ச்சி சம்பவம் !!!
பெண் போலீஸாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம் - அதிர்ச்சி ! சிறப்பு கமாண்டன்ட் கைது !!
என் டி ஏ வில் விஜய்க்கு தொகுதி ஒதுக்கீடு - லாக்ஆன விஜய் ! ஆதவ் போடும் முட்டு கட்டை ...!!