| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Theni District

தேனியில்..! 28 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு..! பதாகைகள்..! வீடுகளில் கருப்புக்கொடி..!

by Vignesh Perumal on | 2026-04-08 01:32 PM

Share:


தேனியில்..! 28 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு..! பதாகைகள்..! வீடுகளில் கருப்புக்கொடி..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வருசநாடு அருகே, 28 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரி முன்னெடுத்துள்ள தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம், தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட 28 மலை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், நீண்டகாலமாக நிலவி வரும் தங்களது அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படாததைக் கண்டித்து, 2026 சட்டமன்றத் தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

கிராமங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் முன்வைக்கப்படும் பிரதான கோரிக்கைகள் இவைதான், வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான மிக முக்கியமான சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சீரமைக்கப்படவில்லை. மேலும், இந்த ஊராட்சியில் உள்ள 28 கிராமங்களுக்கும் முறையான இணைப்புச் சாலைகள் இல்லை. இதனால் மருத்துவம் மற்றும் கல்வித் தேவைகளுக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். வீடுகளைப் பராமரிக்கவும், விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும் வனத்துறையினர் கடும் நெருக்கடி கொடுப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் தங்களுக்குப் பட்டா வழங்கப்படவில்லை என்பதும் இவர்களின் முக்கியக் கோரிக்கை.

தும்மக்குண்டு ஊராட்சியில் உள்ள கிராமங்கள் மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால், போதிய செல்போன் கோபுரங்கள் இல்லை. இதனால் அவசர காலங்களில் யாரையும் தொடர்பு கொள்ள முடிவதில்லை.

கோரிக்கைகளை வலியுறுத்தி, 28 கிராமங்களிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

"சாலை இல்லை என்றால் ஓட்டு இல்லை", "பட்டா வழங்காத அரசைப் புறக்கணிக்கிறோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தைத் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்துடன் இணைந்து பொதுமக்கள் முன்னெடுத்துள்ளனர்.


இந்தச் சாலைப் பணிகளை மேற்கொள்ள முயலும்போது, குறிப்பிட்ட பகுதிகள் வனத்துறைக்குச் சொந்தமான இடங்களுக்குள் வருவதால், சாலை அமைக்க வனத்துறை அனுமதி மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

தேர்தல் நாள் (ஏப்ரல் 23) நெருங்கி வரும் வேளையில், 28 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஆண்டிபட்டி வட்டாட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விரைவில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் போராட்டத்தைக் கைவிட வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"எங்கள் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை வாக்குச்சாவடிக்குச் செல்ல மாட்டோம்" என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.





நிருபர் - மீனாட்சிசுந்தரம் ஆண்டிபட்டி 


நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment