by Vignesh Perumal on | 2026-04-01 09:50 PM
தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் விஐபி தொகுதியாகக் கருதப்படும் ஆண்டிப்பட்டியில், இந்த முறையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் இரு முக்கியக் கட்சிகளின் சார்பில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
ஆண்டிப்பட்டி தொகுதி தமிழக அரசியலில் பல முக்கியத் திருப்பங்களுக்குச் சாட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக, 1984-ல் உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது, நேரில் வராமலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.
2002 இடைத்தேர்தல் மற்றும் 2006 பொதுத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சரானார். இதனால் இது நீண்டகாலமாக 'அதிமுகவின் எஃகு கோட்டை' என அழைக்கப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இத்தொகுதியில் ஒரு சுவாரசியமான குடும்பப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அண்ணன் ஆ. மகாராஜன், அதிமுக சார்பில் தம்பி ஆ. லோகிராஜன் முதன்முதலாக மோதினர். இதில் அண்ணன் மகாராஜன் 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுதியை திமுக வசம் கொண்டு வந்தார்.
இரண்டாவது முறையாக மோதுகையில், மீண்டும் அண்ணன் மகாராஜனே 8,538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில், மூன்றாவது முறையாக அண்ணன் மகாராஜன் (திமுக) மற்றும் தம்பி லோகிராஜன் (அதிமுக) ஆகியோர் நேருக்கு நேர் களம் காண்கின்றனர்.
கடந்த இரண்டு தேர்தல்களை விடவும் இந்த முறை போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணங்கள், 2019 மற்றும் 2021 தேர்தல்களில் டி.டி.வி. தினகரனின் அமமுக தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பிரித்தது (2019-ல் 28,000; 2021-ல் 12,000). இது அதிமுகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. இதனால் பிரிந்து சென்ற வாக்குகள் மீண்டும் அதிமுகவுக்கே வரும் என்பதால், தம்பி லோகிராஜனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிமுகவினர் கருதுகின்றனர்.
சிட்டிங் எம்.எல்.ஏ என்ற முறையில் அண்ணன் மகாராஜன் தனது தொகுதிப் பணிகளையும், அரசின் சாதனைகளையும் முன்வைத்து ஹாட்ரிக் வெற்றி பெறத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
"அண்ணன் தம்பி உறவெல்லாம் வீட்டு வாசலோடு சரி, அரசியல் களத்தில் நாங்கள் எதிரிகள் தான்" என்ற முழக்கத்தோடு இருவரும் ஆண்டிப்பட்டி வீதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக தனது கோட்டையை மீண்டும் மீட்குமா? அல்லது அண்ணன் மகாராஜன் தனது வெற்றிப் பயணத்தைத் தொடருவாரா? என்பது வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
ஆண்டிப்பட்டி அரசியல் யுத்தம்...! அண்ணன் VS தம்பி..! ஆட்சி அதிகாரம் யாருக்கு...?
அதிமுகவிற்கு அதிர்ச்சி...! அதிருப்தியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன்...! திமுகவில் ஐக்கியம்..!
பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம் ! இருவர் அதிரடி கைது !!
பான் கார்டு - புதிய நடைமுறை ! புதிய மாற்றங்கள் - உஷார் !!
மதசார்பற்ற கூட்டணி ஆலோசனைக் கூட்டம்....!!!