| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Chennai

சிறுவன் கடத்தல் வழக்கு...! உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்...!

by Vignesh Perumal on | 2025-06-30 04:56 PM

Share:


சிறுவன் கடத்தல் வழக்கு...! உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன்...!

திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி. குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

ஒரு காதல் திருமண விவகாரம் தொடர்பாக இந்தச் சிறுவன் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையின் போது, காவல்துறை தரப்பில், கடத்தலுக்கு பூவை ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டதாகவும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பூவை ஜெகன்மூர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய தடை விதித்து அவருக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிட்டனர். மேலும், ரூ.25,000 பிணைத்தொகை செலுத்தி வழக்கமான ஜாமீனை பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முன்ஜாமீன் மனு குறித்து தமிழக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.


WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment