by Vignesh Perumal on | 2025-06-30 02:29 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய மதுரையைச் சேர்ந்த காசி என்பவர், 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில், திண்டுக்கல் தாலுகா காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட காசி, ஆரம்பத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், நீதிமன்ற பிணை பெற்று வெளியே வந்த அவர், வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். இதனால், திண்டுக்கல் நீதிமன்றம் காசிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் சிபிசாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் துணை காவல் கண்காணிப்பாளர் தனிப்படை சிறப்பு ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் பிற காவலர்களும் இடம்பெற்றிருந்தனர்.
தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மதுரை அருகே பதுங்கியிருந்த காசியை காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர். நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டு, காசி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம் 29 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த ஒரு கொள்ளை வழக்கின் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.