by Vignesh Perumal on | 2025-06-26 10:14 AM
திண்டுக்கல்லைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் குடலில் தவறுதலாகச் சிக்கியிருந்த 'சேஃப்டி பின்' (safety pin), திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களால் வெற்றிகரமான அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் சிகிச்சை பலனின்றித் திரும்பிய நிலையில், திண்டுக்கல்லில் அளிக்கப்பட்ட இந்த சிகிச்சை சிறுமியின் உயிருக்குப் புத்துயிர் அளித்துள்ளது.
திண்டுக்கல்லைப் பூர்வீகமாகக் கொண்ட 13 வயது சிறுமி ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த மே 5 ஆம் தேதி, சிறுமி எதிர்பாராத விதமாக ஒரு 'சேஃப்டி பின்'னை விழுங்கிவிட்டார். உடனடியாக அவரை ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 'சேஃப்டி பின்' சிறுமியின் வயிற்றில் இருப்பது தெரியவந்தது.
அதை அகற்ற மருத்துவர்கள் மூன்று முறை முயற்சி செய்துள்ளனர். ஆனால், 'சேஃப்டி பின்' வாய் திறந்த நிலையில் இருந்ததாலும், குடலுக்குள் ஆழமாகச் சிக்கியிருந்ததாலும் அதை அகற்ற முடியவில்லை என ஹைதராபாத் மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால், சிறுமியின் பெற்றோர் ஏமாற்றத்துடன் தங்கள் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்குத் திரும்பினர்.
திண்டுக்கல்லுக்குத் திரும்பிய பின்னர், சிறுமிக்கு மலக்குடல் வழியாக ரத்தம் வெளியேறத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில், சிறுமியின் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். மருத்துவர்கள் கார்த்திகா, கவிதா, செவந்து பிரித்திகா, பிரவீன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர், குடல் உள்நோக்கி (Endoscopy) மூலமாக, சிறுமிக்கு மிகவும் கவனமாகவும், வெற்றிகரமாகவும் அறுவை சிகிச்சை செய்து, குடலுக்குள் சிக்கியிருந்த 'சேஃப்டி பின்'னை பாதுகாப்பாக அகற்றினர்.
வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிறுமி தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹைதராபாத்தில் சாத்தியமற்றது என்று கைவிடப்பட்ட நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட இந்தச் சிகிச்சை, மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும், அவர்களின் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளின் சேவையின் முக்கியத்துவத்தையும் இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !