by Vignesh Perumal on | 2025-06-24 06:04 PM
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் விமானத்தில், ₹3 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா மற்றும் சிகரெட்டுகளை கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வழக்கமான பயணிகள் விமானம் ஒன்று வந்தது. விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையிட்டனர்.
சோதனையின் போது, இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்த ஒரு பயணியின் உடைமையில், 6 பாக்கெட்டுகளில் பச்சை நிறத்தில் வித்தியாசமான பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தப் பொருட்களின் தோற்றம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அதிகாரிகள் உடனடியாக அந்தப் பயணியிடம் அது குறித்து விசாரித்தனர். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து, அதிகாரிகள் அந்தப் பொருளை நுணுக்கமாகச் சோதனை செய்தனர். சோதனையில், அந்தப் பச்சை நிறப் பொருள் உருமாற்றம் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா என்பது தெரியவந்தது. மேலும், அந்தப் பயணியின் உடைமையில் சுமார் ₹60 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக சிகரெட்டுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
பிடிபட்ட பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அலி அப்துல் காதர் (52) என்பது தெரியவந்தது. மேலும், அவர் தாய்லாந்தில் இருந்து இந்த உயர்ரக கஞ்சா மற்றும் சிகரெட்டுகளை வாங்கி, இலங்கை வழியாக விமானம் மூலம் மதுரைக்கு கடத்தி வந்ததும் அம்பலமானது.
இதைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அலி அப்துல் காதரை உடனடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து சர்வதேச சந்தை மதிப்பில் ₹3 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள கும்பல் யார், இந்த போதைப்பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்பட இருந்தன, இந்த சர்வதேச கடத்தல் சங்கிலியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்தத் தீவிர சோதனைகள், சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்க பெரிதும் உதவுகின்றன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !