by Vignesh Perumal on | 2025-06-24 12:41 PM
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாகன காப்பகத்தில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த கரூரைச் சேர்ந்த கௌதம் (36) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து திருடப்பட்ட வாகனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாகன காப்பகத்தில், அந்தோணிசாமி என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றது தொடர்பாக, நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வாகன திருட்டு சம்பவங்கள் திண்டுக்கல் நகரில் அதிகரித்து வந்த நிலையில், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில், நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தனிப்படையினர் உடனடியாக களமிறங்கி, அரசு மருத்துவமனை வாகன காப்பகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி ஆகியோரின் உதவியுடன் பதிவுகளை நுணுக்கமாக ஆராய்ந்தபோது, குறிப்பிட்ட மர்ம நபரின் அடையாளம் மற்றும் நடமாட்டம் தெரியவந்தது.
சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் தீவிர விசாரணையின் அடிப்படையில், இந்த இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கரூரைச் சேர்ந்த குழந்தைவேல் மகன் கௌதம் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கௌதமை உடனடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கௌதமிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனை வாகன காப்பகத்தில் வேறு வாகனங்களையும் அவர் திருடியுள்ளாரா, இந்த திருட்டுச் சம்பவங்களில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, திருடப்பட்ட வாகனங்கள் எங்கு விற்கப்பட்டன என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
வாகன திருட்டு கும்பல்களை ஒழிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்கள் தங்கள் வாகனங்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !