by Vignesh Perumal on | 2025-06-24 11:02 AM
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் முறையான அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மணல் தொழிற்சாலைக்கு புவியியல், சுரங்கத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையின் போது இயந்திரங்கள் மற்றும் 4 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தொழிற்சாலையின் உரிமையாளர் உட்பட இருவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குஜிலியம்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முறையான அனுமதி இல்லாமல் ஏராளமான கல் குவாரிகள் மற்றும் மணல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதாகப் பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர், மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து பாளையம் பகுதியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோத மணல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில், செம்மண் அனுமதியின்றி எடுக்கப்பட்டு, அதை சுத்தப்படுத்தி, ஆற்று மணல் போல மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இது அரசின் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்பதும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த அந்த மணல் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். மேலும், அங்கு இருந்த மணல் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் சுமார் 4 யூனிட் அளவுக்கு சுத்தப்படுத்தப்பட்ட மணலையும் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், மற்றும் இயந்திர ஆப்பரேட்டரான தென்னம்பட்டியைச் சேர்ந்த பழனி ஆகியோர் மீது குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், குஜிலியம்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் தயாரிப்பில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத மணல் மற்றும் கனிம வளக் கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !