by Vignesh Perumal on | 2025-06-23 03:36 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 13ல், மாணவியர் விடுதி முன்பு அமைந்துள்ள சாக்கடை கால்வாய் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் மற்றும் அரசு மாணவியர் விடுதியில் தங்கியுள்ள மாணவிகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வார்டு கவுன்சிலர் மற்றும் நகராட்சித் தலைவர் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பெரியகுளம் நகராட்சி வார்டு எண் 13ல் உள்ள மாணவியர் விடுதிக்கு எதிரே உள்ள சாக்கடைக் கால்வாய், நீண்ட காலமாகவே தூர்வாரப்படாமல் குப்பைகள் மற்றும் கழிவுகளால் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். இந்த சாக்கடை அருகிலேயே குழந்தைகள் வசிப்பதும், அரசு மாணவியர் விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கியிருப்பதும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
வார்டு எண் 13ன் கவுன்சிலர் இந்த பிரச்சினையைத் தீர்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், பெரியகுளம் நகராட்சியின் நகர் மன்றத் தலைவரும் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சித் திட்டங்களை மேற்பார்வையிட வேண்டிய கடமையைக் கொண்டவர். ஆனால், அவர் இந்த சாக்கடை அவலத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், நகரின் சுகாதார சீர்கேடு குறித்து அக்கறை காட்டவில்லை என்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
இந்தச் சூழலில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இந்த சாக்கடை அவலத்தை நேரில் ஆய்வு செய்து, உடனடியாக அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவாரா என பொதுமக்கள் ஏக்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
தற்போது நிலவி வரும் இந்த சுகாதார அவலம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிக்க வரும்போது, இந்தக் கேள்வி மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறும் என பொதுமக்கள் பேசிக்கொண்டு வருகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய மக்கள் பிரதிநிதிகளுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்ற மறைமுக எச்சரிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
நாடாளுமன்றம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - தித் .... திக்.... நொடிகள் - பரபரப்பு !
காத்து வாங்கும் தேமுதிக அலுவலகம் - சுணங்கும் நிர்வாகிகள் - காரணம் என்ன. ?
அனுமதியின்றி மதக் கல்வி - பள்ளியை மூட கோர்ட் உத்தரவு !
திருவாரூரில் வேலைநிறுத்தம்...! மறியல் போராட்டம்...! தொழிற்சங்கங்கள் தீவிரம்...!
நகைக் கடன் தள்ளுபடி - அடுத்த ஜாக்பாட்? - எதிர்பார்ப்பில் மக்கள் !