by Vignesh Perumal on | 2025-06-13 05:13 PM
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே விவசாயி ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.40 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்ற மூன்று இளைஞர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சிவா (52), ஒரு விவசாயி. இவர், சம்பவத்தன்று ஆ.நா.பிரிவு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரை வழிமறித்த மூன்று இளைஞர்கள், சிவா வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
உயிர்பயம் ஏற்பட்ட நிலையில், சிவாவிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தைப் பறித்துக்கொண்டு அந்த இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து சிவா உடனடியாக பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பணத்தைப் பறித்துச் சென்றவர்கள் திண்டுக்கல் பேகம்பூரைச் சேர்ந்த அமீர் (31), செம்பட்டி J.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரவணகுமார் (32), மற்றும் கரூர் காக்காவாடியைச் சேர்ந்த உதயகுமார் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.