by Vignesh Perumal on | 2025-06-13 12:41 PM
தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகரில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் அவசரமாகப் புக்கெட் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 156 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை, புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் டெல்லி நோக்கி, ஏர் இந்தியா விமானம் AI 379 புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல் குறித்துத் தகவல் கிடைத்தது.
உடனடியாக, விமானி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு, அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரினார். புக்கெட் விமான நிலையம் அவசரகால திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்தி, விமானம் பாதுகாப்பாக மீண்டும் தரையிறக்க ஏற்பாடு செய்தது.
விமானப் போக்குவரத்து கண்காணிப்புத் தளமான Flightradar24 தகவலின்படி, விமானம் அந்தமான் கடல்பகுதியின் மீது பெரிய வட்டமிட்டு, பின்னர் தாய்லாந்து தீவுக்குத் திரும்பியது.
விமானம் தரையிறங்கியதும், தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள், அவசரகால நடைமுறைகளின்படி, விமானத்தில் இருந்த 156 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். பயணிகள் அனைவரும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விமானத்தைச் சோதனையிட்டனர். முதற்கட்ட தேடுதல் வேட்டையில் விமானத்தில் எந்த வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை என்று தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்த ஒரு குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குறிப்பைக் கண்டெடுத்த பயணி விசாரிக்கப்பட்டு வருகிறார்.
நேற்று (வியாழக்கிழமை), அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஒரு ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகி 242 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சோக நிகழ்வு நடந்த நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள், கடந்த சில மாதங்களாகப் போலி வெடிகுண்டு மிரட்டல்களை அதிக அளவில் எதிர்கொண்டு வருகின்றன. கடந்த 10 மாதங்களில் கிட்டத்தட்ட 1,000 போலி அழைப்புகள் மற்றும் செய்திகள் பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன, இது 2023-ஐ விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.