by Vignesh Perumal on | 2025-05-31 10:13 AM
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் கனமழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலப்புழா, கோட்டயம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நிலைமையைச் சமாளிக்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) களமிறக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்கள் கேரளாவிற்கு விரைந்துள்ளன.
ஒரு குழுவிற்கு 30 வீரர்கள் வீதம், மொத்தம் 120 வீரர்கள் சாலை மார்க்கமாக கேரளாவிற்குப் புறப்பட்டுள்ளனர். இவர்கள் பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை வெளியேற்றுதல், அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தல் மற்றும் தற்காலிக முகாம்களை அமைத்தல் போன்ற பணிகளை NDRF வீரர்கள் மேற்கொள்வார்கள்.
கேரள மாநில அரசு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.