by Vignesh Perumal on | 2025-05-30 03:21 PM
பாமகவின் பொதுக்குழுவால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், தனக்கு கிடைத்த இந்த பொறுப்பு குறித்துப் பேசுகையில், "பாமகவின் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் நான்; கட்சியில் என்றும் அடிமட்டத் தொண்டனாக இருக்க விரும்புகிறேன். பொறுப்புகள் வரும் போகும்; ஆனால் நிரந்தரமானது உங்களின் அன்பும் பாசமும்தான்; அது என்றுமே போகாது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
"சமூகநீதிப் போராளி அய்யாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோம்".
கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மீது முன்பு கடுமையான குற்றச்சாட்டுகளை அன்புமணி ராமதாஸ் முன்வைத்திருந்த நிலையில், தற்போது அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். "சமூகநீதிப் போராளி மருத்துவர் அய்யாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த களத்தில் வேகமாக இறங்குவோம்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேலும், "ராமதாஸ் கொள்கைகளை பின்பற்றுவோம்", "ராமதாஸ் கொள்கைகளை மனதில் வைத்துத் தேர்தல் களத்தில் செயல்படுவோம்", "ராமதாஸின் சமூக நீதி, சமத்துவம் என்ற கொள்கைகளை பின்பற்றுவோம்" என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
முன்னதாக ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், "ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
கட்சியின் பொருளாளர் பதவி குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, "பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார்" என அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். முன்னதாக திலகபாமாவை அப்பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டிருந்த நிலையில், அன்புமணி ராமதாஸின் இந்த அறிவிப்பு கட்சியினுள் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.