| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் Naam Tamilar Katchi

"கர்நாடகாவில் தடுக்கலாம், உலகம் முழுவதும் வெளியாகும்"..! சீமான் ஆவேசம்..!

by Vignesh Perumal on | 2025-05-30 12:23 PM

Share:


"கர்நாடகாவில் தடுக்கலாம், உலகம் முழுவதும் வெளியாகும்"..! சீமான் ஆவேசம்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "கர்நாடகாவில் தடுக்கலாம், உலகம் முழுவதும் 'தக் லைஃப்' வெளியாகும்" என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், "தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்" என்று கமல்ஹாசன் பேசியது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து, கன்னட அமைப்புகள் கமல்ஹாசனுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவரது படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "உலக நாயகன் அண்ணன் கமல்ஹாசன், 'தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்' என்ற வரலாற்று உண்மையை தெரிவித்ததற்காக அவரது படங்களை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம், அவரை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம் என்றெல்லாம் ஒருசில கன்னட அமைப்புகள் மிரட்டல் விடுப்பதும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அடிபணியவைக்க நினைப்பதும் வன்மையான கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்தார்.

மேலும், "இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கு மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்மொழிதான் என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பேருண்மையாகும். அந்த வரையறைக்குள் கன்னட மொழியும் அடங்கும் எனும்போது அதை ஏற்பதில் கன்னட அமைப்புகளுக்கு என்ன சிக்கல்?" என்று கேள்வி எழுப்பினார்.

நடிகர் விஜய் படங்களுக்கும் கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி பேசிய சீமான், "தமிழர்கள் என்றாலே கன்னடர்களுக்கு எதிர்ப்பு" என்ற மனநிலை இருப்பதாகக் குற்றம்சாட்டினார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதற்கு காவிரி நீர் பிரச்சினை காரணமாக கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தியதை அவர் நினைவூட்டினார்.

"அண்ணன் கமல்ஹாசனை கர்நாடகாவில் நுழையவிடமாட்டோம், அவரது படங்களைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்பது என்ன மாதிரியான அணுகுமுறை? தமிழ் படங்கள்தான் கர்நாடகாவில் திரையிடப்படுகிறதா? கன்னட படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படவே இல்லையா?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

மேலும், "கர்நாடக மாநில அரசு, கன்னட அமைப்புகளின் வீணான வெறிச்செயலுக்கு தூபம் போடுவதை விடுத்து, இரு மாநில மக்களின் நல்லிணக்கத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் அண்ணன் கமல்ஹாசன் அவர்களையும், தக் லைஃப் திரைப்பட குழுவையும் மிரட்டும் அடவாடிச் செயல்களில் ஈடுபடும் கன்னடவெறி அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தக் லைஃப் திரைப்படத்தைத் தக்க நேரத்தில் திரையிட உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று சீமான் தெரிவித்தார்.


கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, "கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு தெரியவில்லை. கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உண்டு" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே மொழி மற்றும் கலை சார்ந்த ஒரு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.





நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment