by Vignesh Perumal on | 2025-05-30 11:39 AM
தமிழக அரசு, மாநிலத்தின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலைமையை ஆய்வு செய்து, அவற்றுக்கு மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வு குறித்துப் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏழாவது மாநில நிதி ஆணையத்தின் தலைவராகவும், உறுப்பினர்களாகவும் பின்வருபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது,
தலைவர்: திரு. கே. அலாவுதீன், இ.ஆ.ப., (ஓய்வு)
அலுவல் சாரா உறுப்பினர்: திரு. என். தினேஷ்குமார், மேயர், திருப்பூர் மாநகராட்சி
உறுப்பினர் (அலுவல் வழி): நகராட்சி நிர்வாக இயக்குநர்
உறுப்பினர் (அலுவல் வழி): ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர்
உறுப்பினர் (அலுவல் வழி): பேரூராட்சிகளின் ஆணையர்
உறுப்பினர்-செயலர்: திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அரசு துணைச் செயலாளர் (வரவு-செலவு) (முழு கூடுதல் பொறுப்பு), நிதித்துறை.
இந்த ஆணையம், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகிய ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை விரிவாக ஆய்வு செய்யும். மேலும், பிற இனங்களுடன் சேர்த்து பின்வரும் முக்கிய அம்சங்கள் குறித்துப் பரிந்துரைகளை வழங்கும்:
வருவாய் பகிர்வு: மாநில அரசு விதிக்கக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயினை மாநில அரசுக்கும் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையே எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது குறித்துப் பரிந்துரைத்தல். அத்தகைய வருவாயில் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே அவற்றின் பங்குகளையும் முறையே பிரித்தளிப்பது குறித்தும் பரிந்துரைகள் வழங்கப்படும்.
வரிகள் மற்றும் கட்டணங்கள்: ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படக்கூடிய அல்லது அவைகளே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றைத் தீர்மானித்தல்.
உதவி மானியங்கள்: மாநில அரசின் தொகுப்பு நிதியிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய உதவி மானியங்கள் குறித்துப் பரிந்துரைத்தல்.
இந்த ஆணையம், 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தொடங்கும் ஐந்தாண்டுகளுக்குப் பொருந்தும் வகையில், 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 31 ஆம் தேதிக்குள் தனது அறிக்கையைத் தமிழ்நாடு அரசுக்குச் சமர்ப்பிக்கும்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!