by Vignesh Perumal on | 2025-05-29 08:11 PM
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒட்டன்சத்திரத்தில், ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாகக் கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப் பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலகப் புதிய கட்டடம் ஆகியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (மே 29, 2025) சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வணிக வளாகம் அமைந்துள்ள திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.
விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பல்வேறு திட்டங்களை அறிவித்து, கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகப் பாராட்டினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள்:
மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்:
பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: தற்போது வரை சுமார் 1.16 கோடி மகளிர் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர். தகுதியுள்ள விடுபட்டோருக்கும் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரிப் பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை 18 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2.50 லட்சம் வீடுகளைச் சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித் துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு ரூ.15 கோடி மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக்கையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பெண்கள் மட்டும் படிக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்குப் பயிற்சி பெற்ற மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சிப் பகுதிகளில் ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
ஒட்டன்சத்திரத்தில் 480 வீடுகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு ரூ.65 கோடி மதிப்பீட்டிலும், கீரனூரில் 432 வீடுகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்பு ரூ.60 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் நகராட்சியைத் தூய்மையான நகராட்சியாக மாற்றும் வகையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. குப்பைகளைச் சேகரிக்க வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டம் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கழிவுநீர் சாக்கடைகள் ஏற்கனவே ரூ.13 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.23 கோடி மதிப்பீட்டில் சாக்கடைகள் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் 440 மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றியச் சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுச் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை, குடிநீர், சுகாதாரம், கல்வி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இறுதியாக, பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக, "எல்லோருக்கும் எல்லாம்" என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் அர. சக்கரபாணி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் திரு. முஜிப்புரகுமான், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு. க. திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு. ப. வெள்ளைச்சாமி, ஆணையாளர் திருமதி சுவேதா, கீரனூர் பேரூராட்சித் தலைவர் திரு. க. கருப்புச்சாமி, துணைத்தலைவர் திரு. அப்துல்சுப்பு, நகராட்சிப் பொறியாளர் திரு. சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.