by Vignesh Perumal on | 2025-05-29 07:48 PM
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (மே 29, 2025) காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்த "உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை" திட்டமானது, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட குருந்தனிவாரியேந்தல் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்திட்ட முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து விவசாயிகளிடையே உரையாற்றினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் பேசுகையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் வேளாண்மைத் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகளின் உற்ற தோழனாகத் திகழ்ந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று ‘உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை’ என்ற புதிய திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் குறித்து விளக்கிய மாவட்ட ஆட்சித்தலைவர், "வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், விதைச்சான்றளிப்புத் துறை வட்டார அலுவலர்கள் மற்றும் சார்புத் துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆகியோர், உழவர்களை அவர்களது வருவாய் கிராமங்களிலேயே நேரடியாகச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். மேலும், வேளாண்மையினை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களையும், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சார்புத் துறைகளின் திட்டங்களையும் எடுத்துரைத்து விவசாயிகளைப் பயன்பெறச் செய்வதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்" என்று குறிப்பிட்டார்.
"ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் இரு கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, திட்ட முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களிலும் தலா 2 கிராமங்கள் வீதம் மொத்தம் 24 கிராமங்களில் இத்திட்ட முகாமானது இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த முகாம்களில், அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்" என்று ஆஷா அஜித் தெரிவித்தார்.
வழக்கமாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் விவசாயிகள் துறை சார்ந்த அலுவலர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பர். ஆனால், இந்த "உழவரைத் தேடி" திட்டம், துறை சார்ந்த அலுவலர்களே விவசாயிகளின் இருப்பிடத்திற்குச் சென்று, அவர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.
வேளாண்மைத் துறையானது தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, பட்டு வளர்ச்சி போன்ற பல துறைகளை உள்ளடக்கியது. தேனீ வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவையும் வேளாண்மையைச் சார்ந்ததே. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடனுதவி பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம், விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
"உழவரைத் தேடி வேளாண்மை – உழவர் நலத்துறை" திட்ட முகாம்கள், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் வேளாண்மையுடன் தொடர்புடைய 9 துறை அலுவலர்கள் கலந்துகொள்வர். இது போன்ற முகாம்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துறை ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகள் சொட்டுநீர் பாசனம், சூரிய ஒளித் திட்டம், கூட்டுறவுத் துறையின் பயிர்க்கடனுதவிகள், வேளாண் பொறியியல் துறையின் பவர் வீடர், டிரில்லர், ஸ்பிரேயர் போன்ற திட்டங்கள் குறித்தும் அறிந்து பயன்பெற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் 6 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.69,531/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், தோட்டக்கலைத் துறையின் சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டு திட்டம் 2025-2026ன் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.200/- மதிப்பீட்டிலான பழக்கன்றுகள் தொகுப்பும், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-2026ன் கீழ் 2 விவசாயிகளுக்கு ரூ.68,596/- மதிப்பீட்டிலான கொய்யா மற்றும் மா பரப்பு விரிவாக்கத் தொகுப்புகளும், வேளாண்மைத் துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தின் கீழ் ரூ.735/- மதிப்பீட்டிலான வேளாண் இடுபொருட்களும் அடங்கும்.
மேலும், வேளாண்மைத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பயனுள்ள கண்காட்சியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் திரு.விஜயகுமார், துணை இயக்குநர் (வேளாண் வணிக வேளாண்மை) செல்வி ப.தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர் (மாநில திட்டம்) திரு.மதுரைசாமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி தனலட்சுமி, காளையார்கோவில் வட்டாட்சியர் திரு.முபாரக் மற்றும் வேளாண்மைத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.