by Vignesh Perumal on | 2025-05-29 04:55 PM
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று (மே 29, 2025) அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஒரு திமுக பெண் கவுன்சிலர், அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேயர் வெளியேறினார்.
சேலம் மாநகராட்சியின் மாமன்ற இயல்பு மற்றும் அவசரக் கூட்டம் இன்று மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பேசினர்.
அப்போது, மாமன்ற எதிர்க்கட்சித் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த யாதவமூர்த்தி எழுந்து, "மாநகராட்சியில் கட்டட அனுமதி முறையற்ற வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கப்படுகின்றன" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுக்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக கவுன்சிலர் சுஹாசினி திடீரென யாதவமூர்த்தியின் கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த யாதவமூர்த்திக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் திரண்டனர். இதனால், திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால், கூட்டத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
சலசலப்பைக் கட்டுப்படுத்த மற்ற கவுன்சிலர்கள் முயற்சி செய்தும், நிலைமை கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து, அசாதாரண சூழல் ஏற்பட்டதால், மேயர் ராமச்சந்திரன் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, "மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மாமன்றத்தில் திமுக கவுன்சிலர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற இந்த கைகலப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.