| | | | | | | | | | | | | | | | | | |
தமிழ்நாடு தமிழ்நாடு

நாளை ஆரஞ்ச் அலர்ட்...! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

by Vignesh Perumal on | 2025-05-29 04:34 PM

Share:


நாளை ஆரஞ்ச் அலர்ட்...! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று (மே 29, 2025) மிக கனமழைக்கான "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று "ஆரஞ்ச் அலர்ட்" அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளைக்கான மழை முன்னறிவிப்பு (மே 30, 2025): நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேசம் இடையே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

இன்றும் நாளையும் (மே 29 மற்றும் மே 30) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment