by Vignesh Perumal on | 2025-05-27 05:50 PM
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கல்துறை பகுதியில் சொத்து தகராறு காரணமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் செல்வி மீது கொலை மிரட்டல் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்துறையில் உள்ள தலைமை காவலர் செல்வியின் உறவினர் ரகுபதி என்பவரது தோட்டத்தில் பணிபுரிந்த ஒரு பெண், கடந்த சில தினங்களுக்கு முன், தலைமை காவலர் செல்வி தன்னை சாதியை சொல்லி திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயத்திடம் புகார் அளித்துள்ளார்.
பெண் அளித்த புகாரின் அடிப்படையில், துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயம் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், தலைமை காவலர் செல்வி மீது பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பழனி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் காவலர் மீதே இதுபோன்ற ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.