| | | | | | | | | | | | | | | | | | |
முக்கியச் செய்திகள் General

வானில் பரபரப்பு...! வட்டமடித்த கனிமொழி எம்.பி. விமானம்..!

by Vignesh Perumal on | 2025-05-23 12:34 PM

Share:


வானில் பரபரப்பு...! வட்டமடித்த கனிமொழி எம்.பி. விமானம்..!

பாகிஸ்தானில் இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்கும் நோக்கில், திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு இன்று ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தது. எனினும், அவர்கள் பயணித்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் போர் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் குறித்து சர்வதேச சமூகத்திற்கு விளக்கமளிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நாடுகளுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையிலான குழு ரஷ்யாவுக்குப் பயணிக்கிறது. இந்த குழுவில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. ராஜீவ் ராய், பாஜகவைச் சேர்ந்த எம்.பி. கேப்டன் ப்ரஜேஷ் சௌட்டா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அசோக் குமார் மித்தல், தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரஷ்ய அதிகாரிகளுடன் 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு குறித்து விரிவாக விளக்கவுள்ள இந்த குழு, தொடர்ந்து லாத்வியா, சிலோவேனியா, கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

டெல்லியில் இருந்து புறப்பட்ட கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்தை நெருங்கியபோது, அங்கே எதிர்பாராதவிதமாக உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் ஏற்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக மாஸ்கோ விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதனால், கனிமொழி எம்.பி. மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இருந்த விமானம் சில மணி நேரம் வானில் வட்டமடித்தது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, நிலைமை சீரடைந்ததும், கனிமொழி எம்.பி. மற்றும் அவருடன் பயணித்தவர்கள் பத்திரமாக மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கினர். இந்த திடீர் சம்பவம் விமானத்தில் பயணித்த பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் இந்தியா சந்திக்கும் சவால்களை சர்வதேச அரங்கில் கொண்டு செல்வதற்கும், இந்தியாவின் பாதுகாப்பு நிலைப்பாட்டிற்கு ஆதரவைத் திரட்டுவதற்கும் இந்தத் தூதுக்குழுவின் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment