by Vignesh Perumal on | 2025-05-20 03:09 PM
கடந்த ஏழு மாதங்களில் 25 ஆண்களைக் காதலித்து திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை அபகரித்த இளம்பெண் அனுராதா (23) என்பவர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா, கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் ஒரு திருமண மோசடி கும்பலுடன் இணைந்து, 'அவசர கல்யாணம்' செய்யும் ஆண்களைக் குறிவைத்து இந்த அதிநவீன மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுராதா மற்றும் அவரது கும்பல், சமூக வலைத்தளங்கள் மற்றும் சில திருமணத் தரகர்கள் வழியாக திருமணத்திற்காகப் பெண் தேடும் ஆண்களைக் கண்டறிந்துள்ளனர். மணமகளாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஒரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட ஆண்களுடன் சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொள்வார். முதல் இரவை முடித்த பிறகு, அதிகாலையிலோ அல்லது சரியான வாய்ப்பு கிடைத்ததும், அந்த வீட்டில் உள்ள பணம், நகை மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விடுவார். இந்த முறையில் பல லட்சக்கணக்கான ரூபாய்களை அனுராதா சுருட்டியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானின் சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. விஷ்ணு சர்மா, திருமணத் தரகர்கள் மூலம் அனுராதாவை அறிமுகம் செய்துகொண்டு, கடந்த ஏப்ரல் 20 அன்று பதிவு திருமணம் செய்துள்ளார். ஆனால், மே 2 அன்று வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் அனுராதா தப்பிச் சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்திய போலீசார், அனுராதா மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை தனது வருங்கால மணமகனாக காட்டி, 26வது திருமணத்திற்கு தயாராக இருந்தபோது மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அனுராதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதேபோன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை காரணமாக போபாலில் குடியேறியுள்ளார். அங்குதான் இந்த மோசடி கும்பலுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
'அவசர கல்யாணம்' செய்யும் ஆண்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.
அதிகாரிகளை கூண்டில் ஏற்றுவோம் ! முன்னால் எம்எல்ஏ எச்சரிக்கை !!
பெரிய குளத்தில் கொடி அணி வகுப்பு...!!!
வெற்றி வாய்ப்பில் சந்தேகம் ? மாற்று வழியை தேடும் பாஜக...!
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி ! ஆசிரியர் கைது - உடந்தையாக இருந்த தலைமையாசிரியரும் கைதான அவலம் !!
பெரியகுளம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி ! இரு தரப்பு மோதல் - பரபரப்பு !! திமுக நிர்வாகி உட்பட 5 பேர் !கைது !!