by Vignesh Perumal on | 2025-05-20 02:47 PM
தங்க நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகளில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சில அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள், நகைக்கடன் பெறுவோருக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. RBI வெளியிட்டுள்ள இந்த புதிய வழிகாட்டுதல்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிகிறது.
தங்க நகைக்கடன் பெறுபவர்கள், தாங்கள் அடகு வைக்கும் நகைக்கு உரிய உரிமையாளர் என்பதை நிரூபிக்கும் ஆதாரத்தை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் வழங்க வேண்டும். இதன் மூலம் திருட்டு நகைகளை அடகு வைத்து கடன் பெறும் முயற்சிகள் தடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு தனிநபர், அதிகபட்சமாக 1 கிலோ தங்கம் வரை மட்டுமே அடகு வைக்க முடியும். இந்த வரம்பிற்கு மேல் தங்கம் அடகு வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். அதாவது, ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைக்கு ரூ.75,000 மட்டுமே கடனாகப் பெற முடியும். இது ஏற்கனவே உள்ள நடைமுறைகளில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் அடகு வைக்கும் நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் தூய்மையாக இருக்க வேண்டும். குறைவான காரட் உள்ள நகைகளுக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது கடன் தொகை குறையலாம்.
கடன் தொகையைத் திருப்பிச் செலுத்திய பிறகு, அடமானம் வைக்கப்பட்ட நகைகளை 7 வேலை நாட்களுக்குள் வங்கி அல்லது நிதி நிறுவனம் வாடிக்கையாளருக்குத் திருப்பித் தர வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு தாமதமான நாளுக்கும் ரூ.5,000 அபராதம் செலுத்த நேரிடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நகைக்கடன் ஒப்பந்தத்தில் கடன் தொடர்பான அனைத்து தகவல்களும் (வட்டி விகிதம், கால அளவு, ஏல நடைமுறைகள் போன்றவை) தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தங்க நகைக்கடன்களின் அளவு அதிகரித்து வந்த நிலையில், சில முறைகேடுகளும், மோசடிகளும் நடந்ததாகக் கூறப்படுகிறது. கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, உரிமையாளர் அல்லாதவர்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது போன்ற பிரச்சனைகள் எழுந்தன. இதை ஒழுங்குபடுத்தும் வகையிலும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய விதிகள், நகைக் கடன் பெறுவதில் உள்ள நடைமுறைகளை மேலும் கடுமையாக்கும் என்பதால், கடன் பெறுவோருக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம். குறிப்பாக, உரிமையாளர் ஆதாரம், காரட் அளவு மற்றும் கடன் தொகையின் வரம்பு ஆகியவை பலருக்கு சவாலாக அமையலாம். இருப்பினும், இது தங்கக் கடன் துறையில் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.