by Vignesh Perumal on | 2025-05-20 12:40 PM
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள வண்ணாங்குளம் கிராம மக்கள், தங்கள் நீண்டநாள் கனவாக இருந்த பேருந்து வசதியை இன்று அடைந்தனர். இதுவரை எந்தவித அரசு அல்லது தனியார் பேருந்து போக்குவரத்தும் இல்லாத இந்த கிராமத்திற்கு, முதல்முறையாக அரசுப் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. பேருந்து வந்ததும், கிராம மக்கள் விசிலடித்து, கைத்தட்டி, குலவை போட்டு ஆரவாரத்துடன் வரவேற்றனர். பெண்கள் சிலர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு மாலை அணிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வண்ணாங்குளம் கிராம மக்கள் தங்கள் போக்குவரத்துத் தேவைகளுக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். தங்கள் கிராமத்திற்குப் பேருந்து வசதி கேட்டு, முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பனிடம் பலமுறை கோரிக்கை வைத்திருந்தனர். வண்ணாங்குளம் வழியாக கமுதிக்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்து தருமாறு அவர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன், விரைவாக பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுத்தார். அதன் பலனாக, இன்று வண்ணாங்குளம் கிராமத்தில் அரசுப் பேருந்து சேவை முறைப்படி தொடங்கப்பட்டது. தங்கள் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, கிராம மக்கள் அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இந்தப் பேருந்து சேவை, வண்ணாங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதோடு, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.