| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Tamilnadu

'இது எங்கள் பாரம்பரியம்'...! பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..!

by Vignesh Perumal on | 2025-05-19 05:27 PM

Share:


'இது எங்கள் பாரம்பரியம்'...! பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா புதுநிலைப்பட்டியில் உள்ள கண்ணுடையார் அய்யனார் கோவிலில் பாரம்பரியமாக இருந்த உண்டியலை அகற்றிவிட்டு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதிய உண்டியல் வைக்க முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுநிலைப்பட்டி கிராமத்தைச் சுற்றி 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஆலயத்தின் பரம்பரை மற்றும் பாரம்பரியத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு தனிநபரின் தலையீட்டால் கெடுக்கும் வகையில் அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அந்த தனிநபர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அறநிலையத் துறை அதிகாரிகளைத் தூண்டிவிட்டு கோவில் பாரம்பரிய விஷயங்களில் தலையிடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கோவிலுக்குள் ஏற்கனவே இருந்த பழைய உண்டியலை அகற்றிவிட்டு புதிய உண்டியல் வைப்பதற்கு ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோவிலின் முன்பு திரண்டு, பாரம்பரிய உண்டியலை மாற்றக் கூடாது என்றும், கோவில் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், "இந்தக் கோவிலில் பல ஆண்டுகளாக இந்த உண்டியல் இருந்து வருகிறது. இது எங்கள் பாரம்பரியத்தின் ஒரு அடையாளம். எந்தவித காரணமும் இன்றி, ஒரு தனிநபரின் விருப்பத்திற்காக இதனை மாற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் முயற்சிப்பது வேதனை அளிக்கிறது. எங்கள் ஊரின் பாரம்பரியத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்று தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த திருமயம் காவல்துறையினர் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறையினர், இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


இருப்பினும், பாரம்பரிய உண்டியலை மாற்றும் முயற்சியை அறநிலையத் துறை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்று பொதுமக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்தி-பழனியப்பன் புதுக்கோட்டை.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment