by Vignesh Perumal on | 2025-05-19 12:10 PM
கோவையின் புகழ்பெற்ற மருதமலை வனப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக காயமடைந்த பெண் காட்டு யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
யானையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அதனை பத்திரமாக தூக்கி சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பெரிய கிரேன் ஒன்று வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் யானையை மெதுவாக தூக்கி காயமடைந்த பகுதிகளில் மருத்துவக் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த பெண் யானைக்கு அருகில் அதன் குட்டி யானை மற்றும் மற்ற காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால், சிகிச்சை அளிக்கும் பணியில் இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை நடைபெறும் இடத்தின் அருகே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கும்கி யானைகள் மற்ற காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "காயமடைந்த பெண் யானைக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. யானையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குட்டி யானை மற்றும் மற்ற யானைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. யானை விரைவில் குணமடைந்து வனப்பகுதிக்குள் திரும்பும் என்று நம்புகிறோம்" என்றனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக சிகிச்சை நடைபெற்று வருவதால், யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் இந்த பணி அப்பகுதி மக்களிடையே மிகுந்த கவனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. யானை நலம்பெற பொதுமக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.