by Vignesh Perumal on | 2025-05-19 11:26 AM
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த 6 மாதங்களில் இந்த கும்பல் 5 பேரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது: "சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஐயப்பன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின் பேரில் மற்ற இருவரான ஆட்சியப்பன் மற்றும் ஞானசேகரன் ஆகியோரையும் விசாரித்தோம். இவர்கள் மரக்கட்டையை கொண்டு தாக்கி கொலை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்தில் தடயங்கள் சிக்காமல் இருக்க கையுறைகளை பயன்படுத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த கால் பாத தடங்களை கைதானவர்களின் பாதங்களுடன் ஒப்பிட்டு பார்த்ததில் அவை ஒத்துப்போகின்றன."
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து உருக்கி விற்பனை செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உருக்கப்பட்ட 82 கிராம் நகையை ஆட்சியப்பன் வீட்டில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நகையை உருக்கிக் கொடுத்த ஞானசேகரனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் இதுகுறித்து கூறுகையில், "சிவகிரி கொலை வழக்கில் கைதானவர்களுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் கடந்த 6 மாதங்களில் 5 பேரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துள்ளது. இதற்கான இரு சக்கர வாகனங்களையும், கொள்ளையடித்த நகைகளையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்துபோனவர்களின் செல்போன்களையும் கைப்பற்றியுள்ளோம். கூடுதல் தகவல்களை பெறுவதற்காக கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இந்த தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நபர்கள் இருக்கிறார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கும்பல் 6 மாதங்களில் 5 கொலைகளை செய்திருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.