by Vignesh Perumal on | 2025-05-19 10:42 AM
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஏற்கனவே மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் இதே போன்ற தடையை விதித்திருந்த நிலையில், இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
2025-ம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், சென்னை ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வு நடைபெற்றபோது, கனமழை காரணமாக சுமார் 1 மணி நேரம் 15 நிமிடம் மின் தடை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் போதிய வெளிச்சம் இல்லாமல் சிரமத்துடன் தேர்வு எழுத வேண்டியிருந்தது.
இதனை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், மின் தடையால் கவனச்சிதறல் ஏற்பட்டு முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை என்றும், கூடுதல் நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், மருத்துவக் கனவு சிறு குறைபாடுகளால் பாதிக்கப்படும் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு (NTA) இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வு முகமை ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
ஏற்கனவே மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், திட்டமிட்டபடி ஜூன் 14-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.