by Vignesh Perumal on | 2025-05-18 07:17 PM
திருப்பூரில் பா.ஜ. கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொள்வதற்காக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அப்போது, அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் மந்திரம் (42) மற்றும் தெற்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் சின்னசாமி (40) ஆகியோர் சீருடையில் சென்று அவரை ஒரு தனியார் ஹோட்டலில் சந்தித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், சீருடையில் அரசியல் கட்சி தலைவரை சந்தித்த தலைமை காவலர்கள் மந்திரம் மற்றும் சின்னசாமி ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட மந்திரம் மற்றும் சின்னசாமி இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சி நிகழ்ச்சியில் சீருடையில் காவலர்கள் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ள நிலையில், அவர்கள் இருவரும் அதனை மீறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.