by Vignesh Perumal on | 2025-05-17 11:24 AM
மும்பை மற்றும் ஐதராபாத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, வாசை விரார் மாநகராட்சி நகரமைப்பு துணை இயக்குனர் ஒய்.எஸ்.ரெட்டியுடன் தொடர்புடைய இடங்களில் இருந்து ₹32 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஒய்.எஸ்.ரெட்டி மீது கட்டுமான அனுமதியில் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குப்பை கிடங்குக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் சட்டவிரோதமாக கட்டடம் கட்ட அனுமதி வழங்கியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒய்.எஸ்.ரெட்டிக்கு சொந்தமான மும்பை மற்றும் ஐதராபாத்தில் உள்ள வீடுகள், மேலும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என மொத்தம் 13 இடங்களில் நேற்று (16.05.2025) சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில், ₹32 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒய்.எஸ்.ரெட்டிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகள் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.