by Vignesh Perumal on | 2025-05-15 11:26 AM
மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் இன்று (மே 15, 2025) பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்தது.
சந்தெல் மாவட்டத்தில் உள்ள நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே ஆயுதமேந்திய நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, ஸ்பியர் கார்ப்ஸின் கீழ் இயங்கும் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவு அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் ஆயுதக் கும்பலைச் சேர்ந்த 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், சுட்டுக் கொல்லப்பட்ட நபர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.