by Vignesh Perumal on | 2025-05-14 11:29 AM
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (மே 14, 2025) மாலை திறக்கப்படவுள்ளது. வைகாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் இந்த நடை, மே 19ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு திறந்திருக்கும்.
தந்திரிகள் கண்டரரு ராஜீவரு மற்றும் பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதரி இன்று மாலை 5 மணிக்கு நடையைத் திறப்பார். மங்கல இசை முழங்க நடை திறக்கப்பட்டு, ஆழிக்குண்டத்தில் தீ ஏற்றப்படும். பின்னர், ஐயப்பன் விக்ரகத்தில் உள்ள விபூதி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது, நடை திறந்தவுடன் சாத்தப்படும்.
நாளை அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும். தினமும் இரவு 10:30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மே 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.
கோவில் நிர்வாகத்தினர் தரிசனத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.