by Vignesh Perumal on | 2025-05-13 07:50 PM
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று (மே 13, 2025) கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: "பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அனைவரின் மனதிலும் காயமாக இருந்தது. இன்று கிடைத்துள்ள தீர்ப்பு அந்த காயத்திற்கு மருந்தாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இது, பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி."
மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிய எடப்பாடி பழனிசாமி அரசின் நடவடிக்கை குறித்து கனிமொழி விமர்சித்தார்.
"தனது ஆட்சியில் நடந்த குற்றத்தை தன்னுடைய நிர்வாகமே விசாரிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் எல்லாம், எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றவில்லை. இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை, விசாரணை இல்லை, குற்றவாளிகள் ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படுகின்றனர் என்பதால் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட பல தரப்பிலும் இருந்து வந்த அழுத்தம், போராட்டங்களால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டார்" என்று கனிமொழி கூறினார்.
மேலும், இந்த வழக்கில் விரைவாகவும் நீதியாகவும் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்திற்கும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்புக்காகவும், இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.