by Vignesh Perumal on | 2025-05-11 10:49 AM
ஜம்முவில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) சப்-இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் வீர மரணம் அடைந்தார். இந்த சம்பவம் எல்லையோரப் பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சம்பவம் குறித்து பிஎஸ்எப் அதிகாரிகள் கூறுகையில், ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த தாக்குதலில் ஏழு பிஎஸ்எப் வீரர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் பிகார் மாநிலம் சப்ரா பகுதியைச் சேர்ந்தவர். அவரது வீர மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையிலும் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி செயல்படுவதை காட்டுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் இரு நாட்டு ராணுவ நடவடிக்கைக் குழு இயக்குநர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.